அவதூறு வழக்கில் ராகுல் காந்தி ஆமதாபாத் கோர்ட்டில் ஆஜராகி ஜாமீன் பெற்றார்

ஆமதாபாத் கோர்ட்டுகளில் நடைபெற்றுவரும் அவதூறு வழக்கில் ராகுல் காந்தி நேற்று ஆஜரானார். இதில் ஒரு வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

Update: 2019-10-11 23:30 GMT
ஆமதாபாத்,

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகருக்கு வந்தார். அங்குள்ள 2 மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுகளில் அவர் மீது அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பிரசாரத்தின்போது பா.ஜனதா தலைவர் அமித்ஷாவை கொலை குற்றவாளி என்று விமர்சித்ததற்காக கூடுதல் தலைமை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஒரு அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

2015-ம் ஆண்டு சொராபுதீன் போலி என்கவுன்ட்டர் வழக்கில் அமித்ஷா விடுதலை செய்யப்பட்டதை அவமதிக்கும் வகையில் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளதாக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

கோர்ட்டு வளாகத்தில் 7-வது மாடியில் இருந்த அந்த கோர்ட்டில் நேற்று ராகுல் காந்தி ஆஜரானார். இந்த வழக்கில் தான் குற்றமற்றவன் என்று மாஜிஸ்திரேட்டிடம் அவர் கூறினார். அவரது வக்கீல் ராகுல் காந்தி கோர்ட்டில் ஆஜராவதில் இருந்து விலக்கு கேட்டு ஒரு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது டிசம்பர் 7-ந்தேதி முடிவு எடுக்கப்படும் என்றும், ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கியும் மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். விசாரணையை டிசம்பர் 7-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.

அமித்ஷா தான் இயக்குனராக இருக்கும் ஆமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியில் பண மதிப்பு இழப்பு நடவடிக்கைக்கு பின்னர் 5 நாட்களில் ரூ.750 கோடிக்கு செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றியதாக கூறியதற்காக மற்றொரு கோர்ட்டில் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

அதே வளாகத்தில் இந்த கோர்ட்டு 6-வது மாடியில் உள்ளதால் ராகுல் காந்தி 7-வது மாடியில் இருந்து இறங்கி அந்த கோர்ட்டிலும் ஆஜரானார். இந்த வழக்கு விசாரணையும் டிசம்பர் 7-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு கடந்த முறையே ஜாமீன் வழங்கப்பட்டுவிட்டது.

ராகுல் காந்தி நேற்று முன்தினம் மோடியை விமர்சித்ததற்காக ஒரு அவதூறு வழக்கில் சூரத் கோர்ட்டில் ஆஜரானது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்