வாட்ஸ் அப்பில் சிறுமிகள் பாலியல் காட்சி: தமிழ்நாட்டை சேர்ந்தவர் உள்பட 7 பேர் மீது சி.பி.ஐ. வழக்கு

வாட்ஸ் அப்பில் சிறுமிகள் பாலியல் காட்சி வெளியிட்டது தொடர்பாக, தமிழ்நாட்டை சேர்ந்தவர் உள்பட 7 பேர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.

Update: 2019-10-14 20:12 GMT
புதுடெல்லி,

ஜெர்மனி நாட்டில் சாஷே டிரெப்கே என்பவர் 2015-16-ம் ஆண்டில் பல சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கைது செய்யப்பட்டார். அவர் வீட்டில் சோதனை நடத்தியதில் சிறுமிகள் பாலியல் தொடர்பான ஏராளமான படங்கள், வீடியோக்கள் இருந்தன. அவர் உறுப்பினராக உள்ள 29 வாட்ஸ் அப் குழுக்களுக்கும் அந்த காட்சிகளை பகிர்ந்துள்ளார். இதில் பல நாடுகளை சேர்ந்த 483 உறுப்பினர்கள் உள்ளனர் என்பது தெரிந்தது.

இந்தியாவில் 7 பேர் இருப்பதாகவும், அவர்களது செல்போன் எண் விவரங்களுடன் ஜெர்மனி தூதரகம் கடந்த ஜனவரி மாதம் 31-ந்தேதி சி.பி.ஐ.க்கு தகவல் தெரிவித்தது. இதுதொடர்பாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து, மே 10-ந்தேதி முதல்கட்ட விசாரணையை தொடங்கியது. அந்த செல்போன் சிம்கார்டுகளை வாங்கியவர்களின் விவரங்களை சேகரித்தபோது அந்த எண்கள் தமிழ்நாடு, டெல்லி, அரியானா, மேற்குவங்காளம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருப்பது தெரிந்தது. ஆனால் அந்த எண்களை தொடர்பு கொண்டபோது அதில் ஒன்றுகூட செயல்படும் நிலையில் இல்லை என்பது தெரிந்தது. தொடர்ந்து சி.பி.ஐ. விசாரணை நடத்திவருகிறது.

மேலும் செய்திகள்