இந்திய அரசியலமைப்பு நகல் மீது உறுதிமொழி எடுத்து திருமணம் செய்து கொண்ட ஜோடி

ஒடிசாவில் இந்திய அரசியலமைப்பு நகல் மீது உறுதிமொழி எடுத்து ஜோடி ஒன்று திருமணம் செய்து கொண்டது.

Update: 2019-10-23 03:58 GMT
பெர்ஹாம்பூர்,

ஒடிசாவின் பெர்ஹாம்பூர் நகரில் வசித்து வருபவர் பிப்லப் குமார்.  மருந்து நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.  இவருக்கு துணை நிலை செவிலியராக பணிபுரியும் அனிதா என்பவருடன் திருமணம் நடந்தது.

இந்த ஜோடி தங்களது திருமணத்தின்பொழுது, இந்திய அரசியலமைப்பு நகல் மீது உறுதிமொழி எடுத்து கொண்டதுடன் ரத்ததானம் முகாமும் நடத்தின.

இதில் திருமணத்திற்கு விருந்தினர்களாக வந்தவர்களுடன் இணைந்து தம்பதியும் ரத்ததானம் அளித்தனர்.

இதுபற்றி பேசிய பிப்லப், ஒவ்வொருவரும் வரதட்சணையை தவிர்க்க வேண்டும்.  பட்டாசுகள் அல்லது அதிக ஒலி எழுப்பும் இசை ஆகியவை இல்லாத எளிய திருமணங்கள் சுற்று சூழலுக்கு ஏற்றவை.

ஒவ்வொருவரும் நல்ல ஒரு நோக்கத்திற்காக ரத்ததானம் வழங்க வேண்டும் என்று கூறினார்.  இதேபோன்று, நல்ல நோக்குடன் ரத்ததான முகாம் நடத்தி வாழ்க்கையின் புதிய கட்டத்தினை ஒரு வித்தியாச முறையில் தொடங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது என அனிதா கூறியுள்ளார்.

இந்த முகாமில் விதவைகளும் கலந்து கொண்டனர்.  இது போன்ற திருமணங்கள் மற்றவர்களும் பின்பற்றும் வகையில் ஓர் எடுத்துக்காட்டாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்