‘டெல்லி உடல்நலத்திற்கு தீங்கானது’: சசி தரூர் டுவீட்
டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாடு குறித்து சசி தரூர் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
புதுடெல்லி,
தலைநகர் டெல்லியில் மிக மோசமான அளவில் காற்று மாசுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் மிகுந்த பாதிப்பிற்குள்ளாகி இருக்கின்றனர். டெல்லி அரசாங்கம் காற்று மாசுபாட்டை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் திருவனந்தபுரம் தொகுதியின் மக்களவை உறுப்பினரான சசி தரூர் தனது டுவிட்டர் பக்கத்தில் இது குறித்து டெல்லி அரசாங்கத்தை கேலி செய்யும் விதமாக புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், “எத்தனை நாட்கள் தான் சிகரெட், பீடி மற்றும் சுருட்டு போன்றவற்றை பயன்படுத்தி வாழ்ந்து கொண்டிருப்பீர்கள். சிறிது நாட்கள் டெல்லியில் வந்து தங்கிப் பாருங்கள்- இப்படிக்கு டெல்லி சுற்றுலா துறை” என்று ஹிந்தியில் எழுதப்பட்டுள்ளது.
மேலும் ஒரு சிகரெட் பெட்டிக்குள் சிகரெட்டுகளுக்கு நடுவில் டெல்லியில் உள்ள குதுப்மினார் இருப்பது போலவும் அதன் அருகில் ‘டெல்லி உடல் நலத்திற்கு தீங்கானது’ என்று எழுதியிருப்பது போன்ற புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
இந்தப் பதிவு டெல்லி மக்களின் பிரச்சனையை கேலி செய்வது போல இருப்பதாக கூறி டுவிட்டரில் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
— Shashi Tharoor (@ShashiTharoor) November 2, 2019