6 குழந்தைகள் - 16 பேரக்குழந்தைகள்: கல்வி கற்பதில் ஆர்வம் காட்டும் 105 வயது பாட்டி
கேரளாவைச் சேர்ந்த 105 வயதான பாட்டி, மாநிலத்தின் மிக வயதான கல்வி கற்கும் பெண்மணியாக மாறி உள்ளார்.
கொல்லம்:
கேரளாவைச் சேர்ந்த 105 வயதான பாட்டி, மாநிலத்தின் மிக வயதான கல்வி கற்கும் பெண்மணியாக மாறி உள்ளார் என்று செய்தி நிறுவனம் ஏ.என்.ஐ தெரிவித்துள்ளது.
6 குழந்தைகள் மற்றும் 16 பேரக்குழந்தைகளைக் கொண்ட பாகீரதி அம்மா, 4 ஆம் வகுப்புத் தேர்வு எழுதி உள்ளார்.
தனது 9 வயதில், பாகீரதி தனது சகோதர சகோதரிகளை கவனித்துக்கொள்வதற்காக தனது கல்வியை நிறுத்த வேண்டியிருந்தது. மாநில எழுத்தறிவு திட்டத்தின் அதிகாரிகள் அவரிடம் சென்றபோது, படிப்பதற்கான அவரது நிறைவேறாத கனவு குறித்து அறிந்தனர். இதை தொடர்ந்து 4-ம்வகுப்பு பரீட்சை எழுதினார். அவர் அனைத்து தேர்வுகளும் எழுதி உள்ளார்.
இது குறித்து மாநில எழுத்தறிவு திட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சி.கே.பிரதீப் குமார் கூறும் போது கற்றுக்கொள்ள விரும்பும் மற்றவர்களுக்கு இவர் ஒரு உண்மையான உந்துதலாக உள்ளார்.
கேரள அரசின் கீழ் ஒரு தன்னாட்சி நிறுவனமான கேரள மாநில எழுத்தறிவு மிஷன், மாநிலத்தில் கல்வியறிவு திறனை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. படிக்கவோ எழுதவோ முடியாதவர்கள், அல்லது புதிய கல்வியறிவு பெற விரும்புவர்கள் அல்லது பள்ளியை இடை நிறுத்தியவர்கள் இந்த திட்டத்தில் சேர்ந்து பலன் அடையலாம்.
கடந்த ஆண்டு, 96 வயதான ஒரு பெண், கேரளாவின் கல்வியறிவு திட்டத்தின் கீழ் தேர்வு எழுதி , 98 சதவீத மதிப்பெண்கள் பெற்றார்.
90 சதவிகிதத்திற்கும் அதிகமான கல்வியறிவைக் கொண்ட கேரளாவில் கல்வியறிவின்மையை அகற்றுவதற்காக தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ் தேர்வில் தேர்ச்சி பெற்ற மிக வயதான பெண் பாகீரதி ஆவார்.
கேரள மாநில எழுத்தறிவு திட்ட தேர்வில் ஆலப்புழா மாவட்ட கார்த்தியானி அம்மா 100 மதிப்பெண்களில் 98 மதிப்பெண்கள் பெற்று உள்ளார்.