பெண் தாசில்தார் உயிருடன் எரிப்பு: தீக்காயம் அடைந்த ஊழியரும் சாவு - பலி எண்ணிக்கை 4 ஆனது

பெண் தாசில்தார் உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவத்தில், தீக்காயம் அடைந்த ஊழியரும் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.

Update: 2019-12-02 19:51 GMT
ஐதராபாத்,

தெலுங்கானா அப்துல்லாபூர்மேட்டில் உள்ள தாலுகா அலுவலகத்துக்கு கடந்த மாதம் 4-ந் தேதி வந்த சுரேஷ் என்பவர், அங்கு பணியில் இருந்த பெண் தாசில்தார் விஜயா ரெட்டி (வயது 37) மீது திடீரென பெட்ரோலை ஊற்றி தீவைத்தார். இதில் தீயில் கருகிய விஜயா ரெட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். நிலத்தகராறில் இந்த கொலை சம்பவம் நடந்தது.இந்த சம்பவத்தின்போது விஜயா ரெட்டியை காப்பாற்ற முயன்ற அவரது டிரைவர் குருநாதம், வருவாய்த்துறை ஊழியர் சந்திரையா மற்றும் தீ வைத்த சுரேஷ் ஆகிய 3 பேருக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. அவர்கள் 3 பேரும் வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

இதில் குருநாதம் மறுநாளும், சுரேஷ் 2 நாட்களுக்கு பின்னரும் உயிரிழந்தனர். வருவாய் ஊழியர் சந்திரையாவுக்கு தனியார் மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சுமார் ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று காலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவரையும் சேர்த்து பெண் தாசில்தார் உயிருடன் எரித்து கொல்லப்பட்ட சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.

மேலும் செய்திகள்