அயோத்தி வழக்கில் இருந்து நீக்கம் முட்டாள்தனமானது - வக்கீல் ராஜீவ் தவான்
அயோத்தி வழக்கில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதற்கான காரணம் முட்டாள்தனமானது என வக்கீல் ராஜீவ் தவான் கூறி உள்ளார்.
புதுடெல்லி,
அயோத்தி வழக்கில் சன்னி வக்ப் வாரியம் மற்றும் பிற முஸ்லிம் கட்சிகளுக்காக ஆஜரான வழக்கறிஞர் ராஜீவ் தவான் தற்போது சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மறு ஆய்வு மனு வழக்கில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.
இது குறித்து வழக்கறிஞர் ராஜீவ் தவான் தனது பேஸ்புக் பக்கத்தில், ஜாமியத் உலமா-இ-ஹிந்த் கட்சியில் உள்ள ஒருவரால் தான் நீக்கம் செய்யப்பட்டதாக கூறி உள்ளார். மேலும், தான் நீக்கம் செய்யப்பட்டதற்கான காரணங்கள் 'மொத்த முட்டாள்தனம்' என்று கூறியுள்ளார்.
அவர்களுக்கு என்ன நிர்ப்பந்தங்கள் ஏற்பட்டது என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் அது ஒரு பணிநீக்கம் என்று அவர்கள் எனக்கு உறுதிப்படுத்தினர். இப்போது அவர்கள் நான் நோய்வாய்ப்பட்டிருந்தேன், அதனால் நான் கிடைக்கவில்லை என்று சொல்கிறார்கள், இது ஒரு பொய் என கூறி உள்ளார்.
ராம் ஜென்மபூமி-பாப்ரி மசூதி வழக்கின் முக்கிய தீர்ப்பு தொடர்பாக ஜாமியத் உலமா-இ-ஹிந்த் சுப்ரீம் கோர்ட்டில் மறுஆய்வு மனுவை தாக்கல் செய்த ஒரு நாளில் இந்த சம்பவம் நடந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து பேசிய வழக்கறிஞர் எஜாஸ் மக்பூல், "பிரச்சினை என்னவென்றால், எனது கட்சிக்காரர் ஜாமியத் உலமா-இ-ஹிந்த் நேற்று மறுஆய்வு மனுவை தாக்கல் செய்ய விரும்பினர். ஆனால் ராஜீவ் தவான் கிடைக்காததால் அவரின் பெயரை மனுவில் சேர்க்க முடியவில்லை. இது ஒரு பெரிய பிரச்சினை அல்ல. ராஜீவ் தவான் உடல்நலக்குறைவு காரணமாக வழக்கில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என கூறினார்.