நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற வெங்காய விலை உயர்வு கண்டன போராட்டத்தில் ப.சிதம்பரம்
சிறையில் இருந்து விடுதலையான ப.சிதம்பரம் வெங்காய விலை உயர்வை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டார்.
புதுடெல்லி
ஐ என் எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார் . இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு, அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியதை தொடர்ந்து 106 நாட்களுக்கு பிறகு நேற்று திகார் சிறையில் இருந்து விடுதலையானார்.
விடுதலையான ப.சிதம்பரம் நேரடியாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்திக்க அவரது இல்லத்திற்கு சென்றார். அவருடன் கட்சி எம்.பி. மற்றும் அரது மகன் கார்த்தி சிதம்பரமும் சென்றார்.
ப.சிதம்பரம் நிருபர்களிடம் கூறும் போது, நான் 106 நாட்களுக்கு பிறகு விடுதலையாகி சுதந்திர காற்றை சுவாசிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார். சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மேற்கோள் காட்டி, அவர் இந்த வழக்கைப் பற்றி கருத்து கூற மறுத்துவிட்டார். இன்று பத்திரிகையாளர் சந்திப்பில் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இன்று நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த ப.சிதம்பரம், வெங்காய விலை உயர்வை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டார்.