குடியுரிமை சட்டத்திற்கு எதிராக லக்னோவில் மாணவர்கள் போராட்டம் ; போலீசார் மீது கல்வீச்சு
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக லக்னோவில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார் மீது கல் வீசி தாக்குதல் நடத்தினர்.
லக்னோ
குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் பேரணி நடத்தினர். அப்போது போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க முயன்றதால் போராட்டம் வெடித்தது. சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதோடு, இரண்டு பேருந்துகளுக்கும் தீ வைக்கப்பட்டன. மேலும், இரண்டு பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த நிலையில், நாடுமுழுவதும் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் பல்வேறு மாநிலங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
லக்னோவில் போராட்டம் நடத்திய கல்லூரி மாணவர்கள் போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். கல்லூரிக்குள் போலீசார் நுழைய முயற்சிப்பதாக கூறி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அது போல் ஐதராபாத் மவுலானா ஆசாத் தேசிய உருது பல்கலைக்கழக மாணவர்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும், ஜாமியா மாணவர்களுக்கு ஆதரவாகவும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.