நடிகை சபானா ஆஸ்மியின் விபத்து குறித்த செய்தி வருத்தமளிக்கிறது - பிரதமர் மோடி டுவீட்

நடிகை சபானா ஆஸ்மி விபத்தில் காயமடைந்தது குறித்த செய்தி வருத்தமளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Update: 2020-01-18 15:57 GMT
மும்பை,

இந்தி திரையுலகின் பழம்பெரும் நடிகை சபானா ஆஸ்மி (வயது 69).  இவர் மராட்டியத்தின் ராய்காட் மாவட்டத்தில் மும்பை-புனே விரைவு சாலையில் காரில் சென்று கொண்டிருந்துள்ளார்.

மும்பையில் இருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ள காலாப்பூர் அருகே இன்று மாலை 3.30 மணியளவில் சென்றபொழுது அவரது கார், லாரி ஒன்றின் மீது மோதி விபத்திற்குள்ளானது.  இதில் அவர் படுகாயமடைந்து உள்ளார்.

இதனை அடுத்து சபானா ஆஸ்மி மீட்கப்பட்டு உடனடியாக நவி மும்பையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.  அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  சபனா ஆஸ்மியுடன் அவரது கணவர் ஜாவித் அக்தரும் பயணம் செய்துள்ளார்.  எனினும் விபத்தில் அவர் காயமின்றி தப்பினார்.

இந்நிலையில் இது குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், “நடிகை சபானா ஆஸ்மி விபத்தில் காயமடைந்தது குறித்த செய்தி வருத்தமளிக்கிறது. அவர் விரைவில் குணமடைய நான் பிரார்த்தனை செய்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்