இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு; பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
புதுடெல்லி,
சீனாவில் தோன்றி உலக நாடுகளில் பெரும் பாதிப்பு ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றுநோயானது இத்தாலி, ஈரான் உள்ளிட்ட 160க்கும் மேற்பட்ட நாடுகளில் தீவிர தாக்கம் ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து இதனால் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
இந்தியாவில் இதுவரை 370க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்து உள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
குஜராத் மாநிலம், சூரத் நகரிலுள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த 69 வயது முதியவர் வைரஸ் பாதிப்புக்கு பலியாகி உள்ளார் என குஜராத் சுகாதாரத்துறை தகவல் தெரிவித்து உள்ளது.
இதனால் இந்தியாவில் இன்று ஒரேநாளில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.