மத்திய பிரதேசம்; நம்பிக்கை வாக்கெடுப்பில் சிவராஜ் சிங் சவுகான் வெற்றி
மத்திய பிரதேசத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல் மந்திரி சிவராஜ்சிங் சவுகான் வெற்றி பெற்றார்.
போபால்,
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் 22 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததால் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்தது. நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ள முடியாத நிலையில், கமல்நாத் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து பாஜக ஆட்சியமைக்கும் முயற்சியில் இறங்கியது.
பாஜகவின் சட்டமன்ற குழு கூட்டத்தில், சட்டமன்ற கட்சி தலைவராக சிவராஜ் சிங் சவுகான் தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து அவர் நேற்று இரவு முதல் மந்திரியாக பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் லால்ஜி டாண்டன் பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.
இதன்மூலம் 4-வது முறையாக மத்திய பிரதேச முதல் மந்தியாக அவர் பொறுப்பேற்றார். இந்த நிலையில், மத்திய பிரதேச சட்டமன்றம் இன்று கூடியது. இக்கூட்டத்தில் சிவராஜ் சிங் சவுகான் தனது அரசுக்கான பெரும்பான்மையை நிரூபித்தார். நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் புறக்கணித்தனர். சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி கட்சி எம்.எல்.ஏக்களும் சிவராஜ் சிங்கிற்கு ஆதரவளித்தனர்.