டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 'பிளாஸ்மா வங்கி' அமைக்கப்படும் - அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பிளாஸ்மா வங்கி அமைக்கப்படும் என்று அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்
புதுடெல்லி,
நாட்டின் தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாட்டில் முதல் இடத்தில் மராட்டியமும், அதற்கு அடுத்த இடத்தில் டெல்லியும் உள்ளது. டெல்லியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
டெல்லியில் நேற்று வரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 83,077 ஆக உள்ளது. இதுவரை 52,607 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,623 ஆக உள்ளது.
இந்நிலையில் டெல்லியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதிய திட்டமாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பிளாஸ்மா வங்கி அமைக்க முடிவு செய்துள்ளதாக என்று அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவதது:-
இந்த பிளாஸ்மா வங்கி டெல்லியில் உள்ள கல்லீரல் மற்றும் பிலியரி சயின்ஸ் நிறுவனத்தில் அமைக்கப்படும். பிளாஸ்மா தேவைப்படும் எவருக்கும் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் இந்த வங்கியிலிருந்து வழங்கப்படும் .
இந்த முறைக்கு சில நாட்களில் உதவி எண்களை அறிவிப்போம். அடுத்த இரண்டு நாட்களில் பிளாஸ்மா வங்கி செயல்படத் தொடங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.