காஷ்மீரில் ஜெய்ஷ் இ முகமது இயக்க பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டு கொலை; டி.ஜி.பி. பேட்டி

காஷ்மீரில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தின் 2 பயங்கரவாதிகள் இன்று சுட்டு கொல்லப்பட்டனர்.

Update: 2020-07-13 09:02 GMT
ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் ஸ்ரீகுப்வாரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர் என தகவல் கிடைத்தது.  இதனை தொடர்ந்து போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் கூட்டாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இரு தரப்பினருக்கும் இடையே 6 மணிநேரத்திற்கும் மேலாக மோதல் நடந்தது.  இதில் அடையாளம் தெரியாத பயங்கரவாதி ஒருவன் முதலில் சுட்டு கொல்லப்பட்டான்.  தொடர்ந்து நடந்த மோதலில் மற்றொரு பயங்கரவாதி பலியானான்.

அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்யும் பணியில் படையினர் ஈடுபட்டர்.

இந்நிலையில், சுட்டு கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் பற்றிய முதற்கட்ட விசாரணையில், ஒருவன் உள்ளூர் தீவிரவாதி என்பதும் மற்றொருவன் பாகிஸ்தானை சேர்ந்தவன் என்பதும் தெரிய வந்துள்ளது.  

இதுபற்றி ஜம்மு மற்றும் காஷ்மீரின் டி.ஜி.பி. தில்பாக் சிங் கூறும்பொழுது, இவர்கள் இருவரும் ஜெய்ஷ் இ முகமது என்ற பயங்கரவாத இயக்கத்தினை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டு உள்ளது.  அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன.  தேடுதல் வேட்டை நிறைவடைந்து உள்ளது என தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்