மணிப்பூரில் நாளை மதியம் முதல் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்
மணிப்பூரில் நாளை மதியம் முதல் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.
இம்பால்,
நாட்டில் கொரோனா பாதிப்புகள் ஏற்பட தொடங்கிய நிலையில், வடகிழக்கு மாநிலங்களில் பெருமளவில் பாதிப்புகள் இல்லாமல் இருந்தன. மிசோரம், நாகலாந்து, சிக்கிம் மற்றும் மணிப்பூரில் இதுவரை கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் இல்லை.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக மணிப்பூரில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி, மணிப்பூரில் 2,015 பேருக்கு கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டிருந்தன. இவர்களில் 1,400 பேர் குணமடைந்து உள்ளனர். 615 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.
கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மணிப்பூர் அரசு ஊரடங்கை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளது. இதன்படி, மணிப்பூரில் அடுத்த 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இந்த ஊரடங்கானது நாளை மதியம் முதல் தொடங்குகிறது.