ஒரே நாளில் 48 ஆயிரம் பேர் குணம் அடைந்தனர்: மீட்பு விகிதம் 69.80 சதவீதமாக உயர்வு
ஒரே நாளில் 48 ஆயிரம் பேர் குணம் அடைந்தனர். இதனால் மீட்பு விகிதம் 69.80 சதவீதமாக உயர்ந்தது.;
புதுடெல்லி,
இந்தியாவில் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த ஒரு நாளில், கொரோனாவில் இருந்து 47 ஆயிரத்து 746 பேர் குணம் அடைந்து ஆஸ்பத்திரிகளில் இருந்து வீடு திரும்பினர். இதையடுத்து நாட்டில் கொரோனாவை வீழ்த்தி குணம் அடைந்தோர் எண்ணிக்கை கிட்டத்தட்ட 16 லட்சத்தை எட்டுகிறது.
இதனால் கொரோனாவில் இருந்து மீண்டோர் விகிதம் 69.80 சதவீதமாக உயர்ந்தது.
தற்போது பல்வேறு ஆஸ்பத்திரிகளில் தொடர் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 6 லட்சத்து 39 ஆயிரத்து 929 ஆக இருக்கிறது. சிகிச்சை பெறுவோரைவிட குணம் அடைந்தோர் எண்ணிக்கை 9 லட்சத்து 43 ஆயிரத்து 561 பேர் அதிகம்.
நேற்று 24 மணி நேரத்தில் 871 பேர் பலியாகி உள்ளனர். நேற்று முன்தினம் ஒரே நாளில் 6 லட்சத்து 98 ஆயிரத்து 290 மாதிரிகள் மீது பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை 2 கோடியே 52 லட்சத்து 81 ஆயிரத்து 848 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.