கேரளாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு- இன்று மேலும் 1,242 பேருக்கு தொற்று
கேரளாவில் இன்று ஒரே நாளில் 1,242 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,
தமிழகத்தில் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.
கொரோனா தொற்று பரவலை மிக அருமையாக கையாண்டு கட்டுப்படுத்தியதாக உலக அளவில் பாராட்டப்பெற்ற கேரளாவில், அண்மைக்காலமாக தொற்று பரவல் வேகம் எடுத்துள்ளது அம்மாநில மக்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் கேரளாவில் இன்று மேலும் 1,242 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார். இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 59,544 ஆக உயர்ந்துள்ளது.
மாநிலத்தில் இன்று ஒரேநாளில் தொற்றுக்கு 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 234 ஆக உயர்ந்துள்ளது.
மாநிலத்தில் இன்று ஒரேநாளில் தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 1,238 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 38,887 ஆக அதிகரித்துள்ளது. தொற்று பாதிப்புடன் 20,323 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.