டெல்லி ஜமியா பல்கலைக்கழக நுழைவு தேர்வில் ஆள்மாறாட்டம்; மாணவர் கைது
டெல்லி ஜமியா பல்கலைக்கழக நுழைவு தேர்வில் தேர்வெழுத வேண்டிய மாணவருக்கு பதிலாக ஆள்மாறாட்டம் செய்த மாணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
புதுடெல்லி,
டெல்லியில் புகழ் பெற்ற ஜமியா பல்கலைக்கழகத்தில் நடந்த நுழைவு தேர்வொன்றில் டீன் ஏஜ் மாணவர் ஒருவர் தேர்வெழுதியுள்ளார். சந்தேகத்திற்குரிய வகையில் அவரை பிடித்து விசாரித்ததில் அந்த மாணவர் ஆள்மாறாட்டம் செய்தது தெரிய வந்துள்ளது.
இந்த மாணவரும், தேர்வு எழுத வேண்டிய மாணவரும் பயிற்சி மையம் ஒன்றில் சேர்ந்து ஒன்றாக பயின்று வந்துள்ளனர். அந்த மையத்தின் உரிமையாளர் பிடிபட்ட மாணவரிடம் ஆள்மாறாட்டம் செய்து தேர்வெழுதும்படி கூறியிருக்கிறார்.
இதற்கு பதிலாக, மாணவரின் பயிற்சி கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் என உரிமையாளர் உறுதி கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, இந்த விவகாரத்தில் தொடர்புடைய பயிற்சி மைய உரிமையாளர் மற்றும் தேர்வெழுத வேண்டிய மாணவர் ஆகிய இருவரும் கைது செய்யப்படுவார்கள் என கூறப்படுகிறது. தப்பியோடிய அவர்கள் இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.