வாரிசு அரசியல்; உத்தவ் தாக்கரே மீது நடிகை கங்கனா ரணாவத் தாக்கு

வாரிசு அரசியலின் மோசமான தயாரிப்பு உத்தவ் தாக்கரே என நடிகை கங்கனா ரணாவத் விமர்சித்து உள்ளார்.

Update: 2020-10-27 02:25 GMT
மும்பை, 

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கு விசாரணை தொடர்பாக மும்பை போலீசாரையும், மராட்டிய அரசையும் பிரபல நடிகை கங்கனா ரணாவத் கடுமையாக விமர்சித்து வந்தார். மேலும் மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என கூறியதை அடுத்து மாநில அரசுக்கும், அவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்த விவகாரம் குறித்து நேற்று முன்தினம் நடந்த சிவசேனா கட்சியின் தசரா பொதுக்கூட்டத்தில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கங்கனா ரணாவத்தை தாக்கி பேசினார். அவர், “தங்களது வீட்டில் வாழ்வாதாரம் இல்லாமல் மும்பை வந்தவர்கள் அதற்கு துரோகம் செய்கின்றனர்” என கூறியிருந்தார்.

இதற்கு பதில் அளித்து உள்ள நடிகை கங்கனா ரணாவத் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயை வாரிசு அரசியலின் மோசமான தயாரிப்பு என கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:-

உங்கள் மகன் வயதில் உள்ள பெண் மீதான கோபத்தால், முதல்-மந்திரியாக நீங்கள் ஒட்டு மொத்த மாநிலத்தின் மாியாதையையும் குறைக்க வைத்திருக்கிறீர்கள். உங்களை நினைத்து வெட்கப்படுகிறேன். நான் உங்களது மகன் வயது பெண். சுயமாக முன்னேறிய ஒரு பெண் குறித்து இப்படிதான் பேசுவீர்களா?. நீங்கள் வாரிசு அரசியலின் மோசமான தயாரிப்பு.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்