கேரள தங்க கடத்தல் வழக்கு; முன்னாள் தலைமை செயலாளர் சிவசங்கர் ஜாமீன் மனு தள்ளுபடி

கேரள தங்க கடத்தல் வழக்கில் முதல் மந்திரியின் முன்னாள் தலைமை செயலாளர் சிவசங்கர் ஜாமீன் மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.

Update: 2020-11-17 15:44 GMT
கொச்சி,

கேரளாவின் திருவனந்தபுரம் நகரில் உள்ள தூதரகத்திற்கு கடந்த ஜூலை மாதம் 5ந்தேதி வந்த பார்சலை சந்தேகத்தின்பேரில் சுங்க துறை அதிகாரிகள் சோதனை செய்ததில் அன்றைய மதிப்பில் ரூ.14.82 கோடி மதிப்பிலான 30 கிலோ தங்கம் மறைத்து வைத்து, கடத்தப்பட்டிருந்தது தெரிய வந்தது.

தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், தூதரக முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேசுக்கு இதில் தொடர்பு இருந்தது கண்டறியப்பட்டது.  இதனை தொடர்ந்து தப்பியோடிய அவரையும், சந்தீப் நாயர் என்பவரையும் பெங்களூருவில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர்.  இதுவரை 20 பேர் வரை இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இந்த வழக்கை அமலாக்க துறை மற்றும் சுங்க துறை அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர்.  இந்த வழக்கில் கேரள முதல் மந்திரி பினராயி விஜயனின் முதன்மை செயலாளராக இருந்த சிவசங்கர் என்பவருக்கும் தொடர்பு உள்ளது என குற்றச்சாட்டு எழுந்தது.  இதனை தொடர்ந்து அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

கேரள தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் சார்பில் சிறப்பு என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.  அவர்களில் 10 பேருக்கு நீதிமன்றம் கடந்த அக்டோபரில் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.  3 பேரின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது.

எனினும், வழக்கில் ஜாமீன் வழங்க கோரி சிவசங்கர் தொடர்ச்சியாக மனு செய்த நிலையில், அவை நிராகரிக்கப்பட்டன.  கேரளாவின் கொச்சி நகரில் உள்ள முதன்மை செசன்ஸ் நீதிமன்றம் கடந்த 12-ந் தேதி அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்தது.  இதனால் வருகிற 26-ந் தேதி வரை அவர் காவலில் வைக்கப்படுவார்.

இதனை தொடர்ந்து இந்த வழக்கில் ஜாமீன் வழங்க கோரி முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் அவர் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார்.  இதனை விசாரணைக்கு எடுத்து கொண்ட நீதிமன்றம் இன்று அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டு உள்ளது.

மேலும் செய்திகள்