டெல்லியில் மீண்டும் ஊரடங்கா? துணை முதல்வர் மனிஷ் சிசோடியா விளக்கம்
டெல்லியில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று உச்சத்தில் உள்ளது.
புதுடெல்லி,
டெல்லியில் கொரோனா தொற்று உச்சத்தில் உள்ளது. இதனால் பல்வேறு கட்டுப்பாடுகளை டெல்லி அரசு மேற்கொண்டுள்ளது. இனி திருமண வைபவங்களில் 50 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என டெல்லி அரசு தெரிவித்துள்ளது. இதுநாள் வரை 200 பேர் வரை திருமண நிகழ்வுகளில் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இதனால் டெல்லியில் மீண்டும் முழு ஊரடங்கு என்ற தகவல் பரவத் தொடங்கியது. இந்த நிலையில், செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா கூறியதாவது:-
டெல்லியில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தும் நோக்கம் அரசுக்கு இல்லை. கொரோனா பாதிப்பிற்கு எதிரான போராட்டத்தில் ஊரடங்கு மட்டுமே தீர்வு அல்ல என்று நாங்கள் நம்புகிறோம். சிறந்த மருத்துவமனை மேலாண்மை மற்றும் சிறந்த மருத்துவ வசதிகளே தீர்வுகளாக இருக்க முடியும். அந்த வகையில் டெல்லி அரசு மருத்துவ வசதிகளை சிறப்பாக வழங்கி வருகிறது" என்றார்.