அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 2 முறை உல்லாசம் அனுபவித்தார்; ரமேஷ் ஜார்கிகோளி மீது இளம்பெண் பரபரப்பு புகார்

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி என்னிடம் 2 முறை உல்லாசம் அனுபவித்தார் என்று ரமேஷ் ஜார்கிகோளி மீது இளம்பெண் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

Update: 2021-03-26 21:27 GMT
பெங்களூரு:

இளம்பெண் புகார்

  முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளியின் ஆபாச வீடியோ விவகாரம் குறித்து கடந்த 24 நாட்களாக போலீசில் புகார் அளிக்காமல் இளம்பெண் தலைமறைவாக இருந்து வருகிறார். இந்த நிலையில், தனது வக்கீல் மூலமாக போலீஸ் கமிஷனர் மற்றும் கப்பன்பார்க் போலீஸ் நிலையத்தில் இளம்பெண் புகார் அளித்துள்ளார்.

  2 பக்கங்களை கொண்ட அந்த புகாரில் ரமேஷ் ஜார்கிகோளி மீது இளம்பெண் பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார். அதன் விவரம் வருமாறு:-

நிர்வாணமாக நிற்கும்படி...

  கர்நாடக அணைகள் பற்றிய ஆவணப்படம் எடுக்க நீர்ப்பாசனத்துறை மந்திரியாக இருந்த ரமேஷ் ஜார்கிகோளியை சந்தித்து பேசினேன். அப்போது என்னுடைய செல்போன் எண்ணை அவர் வாங்கி வைத்து கொண்டார். அதன்பிறகு, அடிக்கடி செல்போனில் என்னை தொடர்பு கொண்டு பேசினார். தான் மந்திரியாக இருப்பதால், தனது அதிகாரத்தை பயன்படுத்தி அரசு வேலை வாங்கி தருவதாக கூறினார். அரசு வேலை வேண்டும் என்றால் நான் சொல்லும்படி கேட்டு நடந்து கொள்ள வேண்டும் என்றும் ரமேஷ் ஜார்கிகோளி கூறினார்.

  இதற்கு நானும் சம்மதம் தெரிவித்தேன். என்னுடன் செல்போனில் பேசும் போது ஆபாசமாக பேசுவார். ஒரு மந்திரி என்னுடன் இவ்வாறு பேசியதால், நான் மகிழ்ச்சி அடைந்தேன். டெல்லியில் உள்ள கர்நாடக பவனில் இருந்து கொண்டு வீடியோ அழைப்பு மூலமாக பலமுறை ரமேஷ் ஜார்கிகோளி என்னிடம் பேசினார். அவ்வாறு வீடியோ அழைப்பில் பேசும் போது ஆடைகளை கழற்றி விட்டு நிர்வாணமாக நிற்கும்படி சொன்னார். அவர் கூறியபடி நானும் நடந்து கொண்டேன்.

ஆபாசமாக பேசி திட்டினார்

  அரசு வேலை வாங்கி கொடுப்பது தொடர்பாக என்னுடன் பேச வேண்டும் என்று அடுக்குமாடி குடியிருப்புக்கு வரவழைத்தார். நானும் அங்கு 2 முறை சென்றேன். அவர் சொல்வதை கேட்டு எல்லாவிதமாகவும் நடந்து கொண்டேன். 2 முறை என்னிடம் உல்லாசம் அனுபவித்து, அவரது காம இச்சைக்கு என்னை பயன்படுத்திக் கொண்டார். அதன்பிறகு, சில நாட்கள் கழித்து அரசு வேலை பற்றி கேட்டால், ஆபாசமாக பேசி திட்டினார். அரசு வேலைக்கு பதில் பணம் கொடுப்பதாக கூறினார். இந்த விவகாரம் குறித்து போலீசில் புகார் அளிக்க கூடாது எனவும் ரமேஷ் ஜார்கிகோளி மிரட்டல் விடுத்தார்.

  எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுத்தார். இதன் காரணமாக புகார் அளிக்காமல் இருந்தேன். இந்த விவகாரத்தில் எனக்கு ஆதரவு அளிப்பவர்களுக்கும் போலீசாரால் பிரச்சினை ஏற்படுகிறது. என்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதால், இந்த விவகாரம் குறித்து நேரில் வந்து புகார் அளிக்க முடியாமல், நானே எனது கைப்பட புகார் எழுதி கொடுத்துள்ளேன். எனது சார்பாக வக்கீல் ஜெகதீஷ் புகார் அளிப்பார். அதன்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
  இவ்வாறு அவா் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்