கொரோனா தொற்று உயர்வு; நீட் பி.ஜி.-2021 தேர்வு ஒத்தி வைப்பு
கொரோனா தொற்று உயர்வை முன்னிட்டு மருத்துவ மாணவர்கள் எழுதும் நீட் பி.ஜி.-2021 தேர்வு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
புதுடெல்லி,
நீட் பி.ஜி.-2021 தேர்வானது வருகிற 18ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பு ஒன்றை கடந்த 13ந்தேதி சுகாதார அமைச்சகம் வெளியிட்டது. மருத்துவ மாணவர்கள் எழுத கூடிய இந்த தேர்வுக்கான அறிவிப்பு இன்று வாபஸ் பெறப்பட்டு உள்ளது.
இதுபற்றி மத்திய சுகாதார மந்திரி ஹர்சவர்தன் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், கொரோனா பெருந்தொற்றின் நடப்பு நிலைமையை பார்க்கும்பொழுது, மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் உடல்நலம் ஆகியவற்றை கவனத்தில் கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டு உள்ளது.
அதனால், வருகிற 18ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நீட் பி.ஜி.-2021 தேர்வானது ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. தேர்வுக்கான அடுத்த தேதி நிலைமையை ஆய்வு செய்து பின்னர் அறிவிக்கப்படும். தேர்வு நடத்துவதற்கு முன்பு அதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவித்து உள்ளார்.