காபூல் குண்டுவெடிப்புக்கு இந்தியா கடும் கண்டனம்

காபூல் குண்டுவெடிப்புக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Update: 2021-05-10 02:25 GMT
புதுடெல்லி,

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மகளிர் பள்ளிக்கூடத்துக்கு வெளியே நேற்று முன்தினம் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 50 மாணவிகள் கொல்லப்பட்டனர். மேலும் 100-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இந்த நிலையில் பள்ளி மாணவிகளை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த கொடூர தாக்குதலுக்கு இந்தியா தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

புனித ரமலான் மாதத்தில் காபூல் மகளிர் பள்ளிக்கூடத்தில் நடந்த தாக்குதலை கடுமையாக கண்டிக்கிறோம். இளம் மாணவிகளை குறிவைத்து நடந்த இந்த தாக்குதல் ஆப்கானிஸ்தானின் எதிர்காலம் மீதான தாக்குதலாக அமைந்துள்ளது.

ஆப்கானிஸ்தான் இளைஞர்களின் கல்விக்கு இந்தியா எப்போதும் ஆதரவளித்து வருகிறது. அதேபோல் ஆப்கானிஸ்தானின் முன்னேற்றத்துக்கும், வளர்ச்சிக்கும் இந்தியா எப்போதும் உறுதுணையாக இருக்கும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்