கர்நாடகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து எடியூரப்பா முடிவு செய்வார் - போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை

கர்நாடகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து எடியூரப்பா முடிவு செய்வார் என்று போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.

Update: 2021-06-07 21:54 GMT
பெங்களூரு, 

போலீஸ்-சட்டத்துறை மந்திரி பசவராஜ் பொம்மை ஹாவேரியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் கொரோனா பரவலை தடுக்க கடந்த மே மாதம் 11-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது மாநிலத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ளது. பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விகிதம் 5 சதவீதத்திற்கும் கீழ் குறைந்தள்ளது. நிபுணர்களின் பரிந்துரைப்படி கொரோனா பாதிப்பு 5 சதவீதத்திற்கு கீழ் குறைந்தால் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகளை வழங்கலாம்.

இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து முதல்-மந்திரி எடியூரப்பா ஆலோசித்து முடிவு செய்வார். பா.ஜனதா மேலிடம் விரும்பினால் பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக எடியூரப்பா கூறியுள்ளார். இதுகுறித்து பலரும் தங்களின் கருத்துகளை கூறி வருகிறார்கள். நானும் ஏற்கனவே கருத்து தெரிவித்து உள்ளேன்.

எங்கள் கட்சியின் மாநில தலைவர் நளின்குமார் கட்டீல், முதல்-மந்திரி பதவியில் எடியூரப்பாவே நீடிப்பார் என்று தெளிவாக கூறியுள்ளார். மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷியும் கூறியுள்ளார். இது தான் இறுதியானது.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

மேலும் செய்திகள்