டெல்லி துணிக்கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து: அடுத்தடுத்த கடைகளுக்கு பரவியதால் பதற்றம்
டெல்லியில் துணிக்கடை ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கும் பணியில் 30 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளன.
புதுடெல்லி,
கொரோனா இரண்டாம் அலை குறைந்த காரணத்தால் கடந்த வாரம் முதல் டெல்லியில் உள்ள அனைத்து கடைகளும் சில விதிமுறைகளை பின்பற்றி திறக்கப்பட்டது. இதனால் தற்போது இயல்பு வாழ்க்கை மெல்ல திரும்பி வருகிறது.
இந்நிலையில், டெல்லி லாஜ்பத் நகர் கடைவீதியில் உள்ள துணிக்கடை ஒன்றில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது. சிறிது நேரத்தில் அடுத்தடுத்து உள்ள கடைகளுக்கு வேகமாக பரவத் தொடங்கியது. 30 வாகனங்களில் வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டரில், “தீயணைப்பு வாகனங்கள் அந்த இடத்தை அடைந்துள்ளன. நிவாரணம் மற்றும் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. நான் தொடர்ந்து நிலைமையைக் கண்காணித்து வருகிறேன், தீயணைப்புத் துறை அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.