மும்பை தாராவியில் 2-நாட்களுக்குப் பிறகு மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு

நாடு முழுவதும் கொரோனா வைரசின் 2-வது அலை பரவல் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது.

Update: 2021-06-16 18:47 GMT
Photo Credit: AFP
மும்பை,

ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியும், தமிழர்கள் அதிகம் வசிக்கும் மும்பை தாராவியில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ந் தேதி கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதன் பிறகு அங்கு தொற்று மின்னல் வேகத்தில் பரவியது. கடந்த ஜனவரி மாதம் அங்கு நோய் பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. பிப்ரவரி 2-ந் தேதி அங்கு ஒருவருக்கு கூட பாதிப்பு கண்டறியப்படவில்லை.

இந்தநிலையில் 2-வது அலை காரணமாக அங்கு மீண்டும் கொரோனா வேகமாக பரவியது. இதில் ஏப்ரல் மாதம் வைரஸ் பாதிப்பு உச்சத்தில் இருந்தது. தற்போது அங்கு நோய் பரவல் மீண்டும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த திங்கள் கிழமை  தாராவியில் ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. நேற்று முன் தினமும் அங்கு ஒருவருக்கு கூட பாதிப்பு கண்டறியப்படவில்லை. தொடர்ந்து 2 நாளாக ஒருவர்கூட தொற்றால் பாதிக்கப்படாமல் இருந்த நிலையில் நேற்று ஒருவருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 

இதுவரை தாராவியில் 6 ஆயிரத்து 862 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது தாராவியில் 10-பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்