இந்தியாவில் வந்த புகார்களை தொடர்ந்து கடந்த மாதம் கூகுள் 59,000 உள்ளடக்கங்களை நீக்கியது
இந்திய பயனர்களின் புகார்களை தொடர்ந்து கடந்த மாதம் கூகுள் 59,000 உள்ளடக்கங்களை நீக்கி உள்ளதாக கூறி உள்ளது
புதுடெல்லி
மத்திய அரசு கடந்த பிப்ரவரி 25-ந் தேதி புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை வெளியிட்டது.இந்த விதிகளுக்கு உடன்படுவதாக மே 25-ந் தேதிக்குள் சமூக வலைத்தள நிறுவனங்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால், அவற்றுக்கு சட்ட பாதுகாப்பு கிடைக்காது.
ஏதேனும் புகார் வரும்போது, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனறு விதிகளில் கூறப்பட்டுள்ளது. ம
கூகுள், பேஸ்புக், வாட்ஸ் அப் ஆகிய நிறுவனங்கள் புதிய விதிகளுக்கு இணங்கி செயல்பட சம்மதம் தெரிவித்துள்ளன.
கூகுள் நிறுவனத்தின் முதல் மாத வெளிப்படைத்தன்மை அறிக்கையின்படி,இந்தியாவில் தனிப்பட்ட பயனர்களிடமிருந்து 27,700 க்கும் மேற்பட்ட புகார்கள் வந்ததைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதத்தில் கூகுள் தனது சமூக ஊடக தளங்களில் இருந்து சுமார் 59,350 உள்ளடக்கங்களை நீக்கி உள்ளது.
பெறப்பட்ட புகார்களில் சுமார் 96 சதவீதம் பதிப்புரிமை தொடர்பான பிரச்சினைகள். அதைத் தொடர்ந்து வர்த்தக முத்திரை தொடர்பாக (1.3சதவீதம் ),அவதூறு (1சதவீதம்), சட்டம் (1சதவீதம்), போலியானவை தொடர்பாக (0.4 சதவீதம் ) மற்றும் சூழ்ச்சி தொடர்பாக (0.1 சதவீதம் ).
இதுகுறித்த மின்னஞ்சல் அறிக்கையில், கூகிள் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது:-
உலகெங்கிலும் இருந்து பெறும் பல்வேறு வகையான கோரிக்கைகள் மற்றும் அதற்கு எவ்வாறு பதிலளிக்கப்படுகிறது என்பதில் வெளிப்படைத்தன்மையை நிறுவனம் கொண்டுள்ளது. இந்த கோரிக்கைகள் அனைத்தும் 2010 முதல் நிறுவனத்தின் தற்போதைய வெளிப்படைத்தன்மை அறிக்கையில் கண்காணிக்கப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளன.
புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி மாதாந்திர வெளிப்படைத்தன்மை அறிக்கையை நாங்கள் வெளியிடுவது இதுவே முதல் முறையாகும், மேலும் இந்தியாவுக்கான எங்கள் அறிக்கை செயல்முறைகளை நாங்கள் செம்மைப்படுத்துவதால் மேலும் விவரங்களை தொடர்ந்து வெளியிடுவோம்" என்று செய்தித் தொடர்பாளர் கூறி உள்ளார்.