மராட்டியத்தில் காங்கிரசுக்கே சபாநாயகர் பதவி: நானாபடோலே
காங்கிரஸ் கட்சிக்கே சபாநாயகர் பதவி என்றும், இது தொடர்பாக கூட்டணி கட்சிகள் இடையே கருத்து வேறுபாடு இல்லை என்றும் நானாபடோலே கூறினார்.
சபாநாயகர் பதவி
மராட்டியத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தி வருகின்றன. இந்த நிலையில் சட்டசபை சபாநாயகராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நானா படோலே சமீபத்தில் பதவி விலகினார். கட்சியின் மாநில தலைவர் பதவி வழங்கப்பட்டதை அடுத்து அவர் இந்த முடிவை எடுத்தார்.இந்த நிலையில் நாளை (திங்கட்கிழமை)
தொடங்கி 2 நாள் சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் நடக்க உள்ளது. அப்போது புதிய சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார் என நம்பப்படுகிறது.
இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் நானா படோலே கூறியதாவது:-
கருத்து வேறுபாடு இல்லை
சிவசேனா தலைமையிலான மகாவிகாஸ் அகாடி அரசு 5-ந் தேதி தொடங்கும் மாநில சட்டசபை கூட்டத்தொடரில் சபாநாயகருக்கான தேர்தலை நடத்த முடிவு செய்துள்ளது. இருப்பினும் கூட்டணியில் உள்ள எம்.எல்.ஏ.க்களின் கொரோனா சோதனை முடிவு வெளியான பின்பு தான் இதுகுறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். கவர்னர் அலுவலகத்தை பயன்படுத்தி அரசியல்
விளையாட்டில் ஈடுபட பா.ஜனதா முயற்சி செய்கிறது. இதுபோன்ற தந்திரங்களை பற்றி நாங்கள் கவலைப்படுவதில்லை. கவர்னரின் கடிதத்திற்கு முதல்-மந்திரி எடுத்த நிலைப்பாட்டை நாங்கள் ஆதரிக்கிறோம்.
3 கூட்டணி கட்சிளும் தங்களின் சட்டமன்ற உறுப்பினர்களை நம்புகிறோம். காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் சபாநாயகர் ஆவதில் கூட்டணி கட்சிகளுக்கு இடையே எந்தவித கருத்துவேறுபாடும் இல்லை.பா.ஜனதாவை எதிர்க்கும் கட்சிகளை பயமுறுத்த மத்திய அரசு அமலாக்கத்துறையும் மற்றும் சி.பி.ஐ.யும் பயன்படுத்துகிறது. ஆனால் நாங்கள் அவர்களுக்கு பயப்பட மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.