உத்தர பிரதேச உள்ளாட்சி தேர்தலில் பாஜக வெற்றி, அகிலேஷ் யாதவுக்கு கடும் பின்னடைவு

உத்தர பிரதேச உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது.

Update: 2021-07-04 05:02 GMT
லக்னோ,

உத்தர பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரியாக யோகி ஆதித்யநாத் பதவி வகித்து வருகிறார். அடுத்த  ஆண்டு  அம்மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,  உள்ளாட்சி அமைப்பான ஜிலா பஞ்சாயத் (மாவட்ட கவுன்சில்) தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் முடிவுகளில், 75 இடங்களில் 67-ல் பாஜக வென்றுள்ளது. அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி வெறும் 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 

ராஷ்ட்ரிய லோக் தள், ஜனசட்டா தள் மற்றும் சுயேட்சை ஆகியவை தலா ஒரு இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.  கடந்த 2016- ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி 60 இடங்களில் வென்றிருந்தது.  எனினும், உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை கருத்தில் கொண்டு அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போக்கை கணிக்க முடியாது என்று தேர்தல் நிபுணர்கள் கூறுகின்றனர்.  

இதற்கிடையே, பாரதிய ஜனதா கட்சி , தேர்தலில் மோசடி செய்து வெற்றி பெற்றுள்ளதாகக் கூறி சமாஜ்வாடி கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த குற்றச்சாட்டை முன்வைத்து பல இடங்களில் நேற்று சமாஜ்வாடியினர் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். பிரக்யாராஜ் நகரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்