இந்தியாவில் இதுவரை 44.54 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை: ஐ.சி.எம்.ஆர். தகவல்

இந்தியாவில் இதுவரை 44.54 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர். தெரிவித்து உள்ளது.

Update: 2021-07-19 04:33 GMT
கோப்புப்படம்
புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் வேகம் சற்று குறைந்து வருகிறது. கொரோனா பரவலின் 2-வது அலையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட தீவிர நடவடிக்கைகள் காரணமாக நோய்த் தொற்றில் இருந்து குணமடைபவர்களின் விகிதம் அதிகரித்துள்ளது. தொற்று பாதிப்பைக் கண்டறியும் வகையில் பரிசோதனைகளும் அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இதனிடையே நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 38,164 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 கோடியே 11 லட்சத்து 44 ஆயிரத்து 229 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பால் ஒரேநாளில் மேலும் 499 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4,14,108 ஆக உயர்ந்து உள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது வரை 4,21,665 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் இதுவரை போடப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 40,64,81,493 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய நேற்று ஒரே நாளில் 14,63,593 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 44,54,22,256 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது. 

மேலும் செய்திகள்