மராட்டியத்தில் இதுவரை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியை தாண்டியது

மராட்டியத்தில் இதுவரை 4 கோடிக்கும் அதிகமானோர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-07-21 03:11 GMT
மும்பை,

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது. ஆரம்பத்தில் சுகாதாரப்பணியாளர்களும், முன்கள பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. பின்னர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போடப்பட்டது. தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது.

இந்நிலையில் மராட்டிய மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, அங்கு நேற்று வரை தடுப்பூசி போட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியை தாண்டி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 3 கோடியே 6 லட்சத்து 99 ஆயிரத்து 399 பேர் முதல் டோஸ் போட்டுள்ளனர். 93 லட்சத்து 25 ஆயிரத்து 362 பேர் 2 டோஸ்களையும் செலுத்தி கொண்டனர்.

இதில் 69 லட்சத்து 11 ஆயிரத்து 125 பேர் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள். 18 முதல் 44 வயதுவரை உள்ளவர்கள் 4 லட்சத்து 15 ஆயிரத்து 80 பேர். இதேபோல 8 லட்சத்து 85 ஆயிரத்து 982 சுகாதார ஊழியர்களும், 10 லட்சத்து 63 ஆயிரத்து 221 முன்கள பணியாளர்களும் 2 டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டதாக மாநில கூடுதல் செயலாளர் பிரதீப் வியாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்