கர்நாடக அரசியல் பரபரப்புக்கு இடையே மாநில மந்திரி முருகேஷ் நிரானி டெல்லி வருகை

கர்நாடக முதல் மந்திரியாக உள்ள எடியூரப்பா மாற்றப்பட உள்ளதாக கடந்த சில வாரங்களாக தகவல்கள் பரவிவருகின்றன.

Update: 2021-07-26 03:30 GMT
புதுடெல்லி,

கர்நாடக முதல் மந்திரியாக உள்ள  எடியூரப்பா மாற்றப்பட உள்ளதாக கடந்த சில வாரங்களாக தகவல்கள் பரவிவருகின்றன. இது குறித்து  எடியூரப்பா நேற்று பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-  முதல்வா் பதவியில் நீடிக்க வேண்டுமா? இல்லையா? என்பது குறித்து பாஜக தேசியத் தலைமையிடம் இருந்து எவ்வித தகவலும் ஞாயிற்றுக்கிழமை மாலை வரை வந்துசேரவில்லை. 

ஒருவேளை இரவு அல்லது திங்கள்கிழமை காலை தகவல் கிடைக்கலாம். அடுத்த 10-15 ஆண்டுகளுக்கு கட்சியின் வளா்ச்சிக்காக இரவு பகலாக உழைப்பேன். இதில் யாருக்கும் எவ்வித சந்தேகமும் தேவையில்லை. ஏற்கெனவே திட்டமிட்டப்படி,  இன்று நடக்கவிருக்கும் அரசின் 2-ஆம் ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சியில் நான் எனது அரசின் சாதனைகளை கூறவிருக்கிறேன். அதன்பிறகு பிற விஷயங்கள் குறித்து தெரியவரும். கட்சி மேலிடத்திடம் இருந்து எவ்வித தகவலும் வராவிட்டால், அதன்பிறகு நான் முடிவெடுப்பேன்” என்றார். 

கர்நாடக அரசியல் வட்டாரத்தில் மிகவும் பரபரப்பாக எடியூரப்பா விவகாரம் பேசப்பட்டு வரும் நிலையில், கர்நாடக மந்திரி முருகேஷ் நிரானி டெல்லி வருகை தந்துள்ளார். டெல்லியில் பாஜகவின் மேல் மட்ட தலைவர்களை அவர் சந்தித்துப் பேச இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. எனினும், தனிப்பட்ட பயணமாக நிரானி டெல்லி வருகை தந்து இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்