திரிபுராவில் கொடி ஏற்ற சென்றபோது திரிணாமுல் எம்.பி. மீது பா.ஜ.க.வினர் தாக்குதல்

திரிபுராவில் சுதந்திர தினத்தில் கொடியேற்றுவதற்காக சென்ற திரிணாமுல் எம்.பி. கார் மீது பா.ஜ.க. தொண்டர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

Update: 2021-08-15 20:26 GMT

அகர்தலா,

திரிபுராவில் வரும் 2023ல் சட்டசபை தேர்தல் நடக்கிறது.  இந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரசும் போட்டியிட முடிவு செய்துள்ளது. இதனால், இம்மாநிலத்தில் கட்சியை பலப்படுத்துவதற்காக திரிணாமுல் தலைவர்கள் அங்கு சென்று, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகின்றனர்.

இதனால், இம்மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் பா.ஜ.க.வுக்கும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்கும் இடையே கடந்த சில நாட்களாக மோதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

இந்த நிலையில், சுதந்திர தினத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டோலா சென் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று தேசியக்கொடி ஏற்றுவதற்காக திரிபுரா சென்றார். 
பெலோனியா நகர் அருகே அவர் காரில் சென்றபோது பா.ஜ.க. ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர் என்று குற்றம்சாட்டி உள்ளார்.  இதில், தனது கார் சேதமடைந்து விட்டது என்று கூறியுள்ளார்.  அவருடன் வந்த ஒருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டு உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்