கேரளாவில் பெண்ணை கொன்று சமையலறையில் உடலை புதைத்த கள்ளக்காதலன்

அடிமாலி அருகே பெண்ணை கொலை செய்து, சமையலறையில் உடலை புதைத்த கள்ளக்காதலனை போலீசார் ேதடி வருகின்றனர்.

Update: 2021-09-04 20:42 GMT
கணவரை பிரிந்த பெண்
அடிமாலி அருகே உள்ள பணிக்கன்குடி பகுதியை சேர்ந்தவர் சிந்து (வயது 45). கூலித்தொழிலாளி. திருமணமான இவர், கருத்து வேறுபாட்டால் கணவரை பிரிந்து 12 வயது மகனுடன் வசித்து வந்தார்.கடந்த சில தினங்களுக்கு முன்பு சிந்துவின் மகன் உறவினர் வீட்டுக்கு சென்றார். அதன்பிறகு கடந்த மாதம் 12-ந்தேதி வீடு திரும்பினார். அப்போது, வீட்டில் சிந்துவை காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.இதுகுறித்து சிந்துவின் உறவினர்கள் விசாரித்தனர். அப்போது சிந்துவுக்கும், அவருடைய பக்கத்து வீட்டில் தனியாக வசித்த பினோய் (52) என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது.

சமையல் அறைக்குள் பிணம்
இந்தநிலையில் பிரிந்து சென்ற கணவரை அடிக்கடி சிந்து சந்தித்து வந்தார். இது, கள்ளக்காதலன் பினோய்க்கு பிடிக்கவில்லை. கணவரை சந்திக்கக்கூடாது என்று அவர் சிந்துவை மிரட்டி இருக்கிறார்.இதுபற்றிய விவரத்தை தனது குடும்பத்தினரிடம் சிந்து தெரிவித்துள்ளார். எனவே பினோய் மீது சிந்துவின் குடும்பத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதற்கிடையே பினோய் குறித்து விசாரித்தபோது அவர் தலைமறைவாகி விட்டது தெரியவந்தது.இதனையடுத்து நேற்று முன்தினம் மாலை, சிந்து குடும்பத்தினர் பினோய் வீட்டுக்கு சென்றனர். அப்போது பூட்டி கிடந்த பினோயின் வீட்டை திறந்து சோதனையிட்டனர். இதில், வீட்டின் சமையல் அறையில் புதிதாக குழி தோண்டிய நிலை காணப்பட்டது. அந்த இடத்தில் மண்ணை சிறிதளவு அப்புறப்படுத்திய போது, சிந்துவின் கைவிரல்கள் வெளியே தெரிந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த சிந்துவின் குடும்பத்தினர், அடிமாலி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

உடல் தோண்டி எடுப்பு
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் சிந்துவின் உடல் தோண்டி வெளியே எடுக்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், சிந்துவை பினோய் கொலை செய்து வீட்டின் சமையல் அறையில் குழி தோண்டி புதைத்து விட்டு தலைமறைவாகி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பினோயை பிடித்தால் தான் சிந்து எப்படி கொலை செய்யப்பட்டார் என்ற விவரம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். பெண்ணை கொலை செய்து சமையல் அறையில் உடலை கள்ளக்காதலன் புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்