சீக்கியர்களின் பர்காஷ் பூரப் புனித நிகழ்வுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
சீக்கியர்களின் ஸ்ரீ குரு கிரந்த சாஹிப் ஜி என்ற புனித நூல் எழுதியதன் நிறைவை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லி,
சீக்கிய மதத்தினரின் புனித நூல் ஸ்ரீ குரு கிரந்த சாஹிப் ஜி. சீக்கியர்களின் 5வது குருவான அர்ஜன் தேவ் ஜி என்பவர் தலைமையில் கடந்த 1604ம் ஆண்டு ராம்சர் சாஹிப் குருத்வாராவில் இந்த நூலானது எழுதப்பட்டது. அதன்பின்னர் இந்த நூல் நிறைவு பெற்றது.
இதனை பர்காஷ் பூரப் என்ற பெயரில் சீக்கியர்கள் ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர். இதன்படி, பஞ்சாப்பின் அமிர்தசரஸ் நகரில் உள்ள பொற்கோவிலில் மத ஊர்வலம் ஒன்றும் இன்று நடைபெற்றது.
இந்நிலையில், பிரதமர் மோடி பர்காஷ் பூரப்புக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார். அவர் வெளியிட்ட செய்தியில், ஒட்டுமொத்த மனித குலத்துக்கு வழிகாட்டும் வகையில் இரக்கம், நீதி மற்றும் சமத்துவம் ஆகிய உயரிய கொள்கைகளை வலியுறுத்தும் பர்காஷ் பூரப் புனித நிகழ்வுக்கு என்னுடைய வாழ்த்துகள் என்று தெரிவித்து உள்ளார்.