ஒடிசாவில் கோதுமை ஏற்றிச்சென்ற சரக்கு ரெயில் தடம் புரண்டு ஆற்றில் விழுந்தது

ஒடிசா மாநிலத்தில், கோதுமை ஏற்றிச்சென்ற ஒரு சரக்கு ரெயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டு ஆற்றுக்குள் விழுந்தன. என்ஜின் டிரைவர் உயிர் தப்பினார்.

Update: 2021-09-14 21:25 GMT
கோதுமை
ஒடிசா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ஒடிசா மாநிலம் பிரோஸ்பூரில் இருந்து குர்தா ரோடு நோக்கி நேற்று அதிகாலை ஒரு சரக்கு ரெயில் புறப்பட்டது. அதில், கோதுமை மூட்டைகள் ஏற்றப்பட்டு இருந்தன. அங்குல் ரெயில் நிலையத்தை தாண்டி, நந்திரா ஆற்றின் மீது கட்டப்பட்ட ரெயில்வே பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது, அந்த ரெயில் திடீரென தடம் புரண்டது.

12 ரெயில்கள் ரத்து
ரெயிலின் 6 பெட்டிகள், நந்திரா ஆற்றுக்குள் விழுந்தன. நல்லவேளையாக, என்ஜின் பகுதி, தண்டவாளத்திலேயே நின்று விட்டதால் என்ஜின் டிரைவர் உள்ளிட்ட ஊழியர்கள் உயிர் தப்பினர்.கனமழையால், தண்டவாளம் முழுவதும் மழை நீர் தேங்கி நின்றதுதான் விபத்துக்கு காரணம் என்று கருதப்படுகிறது. அந்த தண்டவாளம், ஒற்றைப்பாதை என்பதால், அந்த வழியாக வேறு ரெயில்கள் செல்ல முடியாதநிலை ஏற்பட்டது. அதனால், 12 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. 8 ரெயில்கள், வேறு பாதையில் திருப்பி விடப்பட்டன.

மேலும் செய்திகள்