லகிம்பூர் கேரி வன்முறை: மேலும் 4 பேர் கைது
லகிம்பூர் வன்முறை சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் லகிம்பூர் கேரியில், போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது பா.ஜனதாவினர் சென்ற கார்கள் மோதியதில் 4 விவசாயிகள் பலியானார்கள். தொடர்ந்து அங்கு வன்முறை ஏற்பட்டது. இதில் 4 பேர் உயிரிழந்தனர்.
நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா உட்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மத்திய மந்திரி மகன் ஆஷிஸ் மிஸ்ரா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், வன்முறை சம்பவம் தொடர்பாக மேலும் 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களில் ஒரு நபரான சத்ய பிரகாஷ் திரிபாதி என்பவரிடம் தோட்டாக்களுடன் கூடிய கைத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. லகிம்பூர் கேரி வன்முறை தொடர்பாக இதுவரை கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.