“பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பின்பு வளர்ச்சி பணிகள் நடைபெறவில்லை” - சித்தராமையா குற்றச்சாட்டு

பா.ஜனதாவுக்கும், ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கும் எந்த வேறுபாடும் இல்லை என சித்தராமையா விமர்சித்துள்ளார்.

Update: 2021-10-27 18:25 GMT
பெங்களூரு,

விஜயாப்புரா மாவட்டம் சிந்தகியில் நேற்று காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்த எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பேசியதாவது:-

“நான் முதல்-மந்திரியாக இருந்த போது எஸ்.டி. மற்றும் எஸ்.சி. சமுதாய மக்களுக்கு ஏராளமான நிதியை ஒதுக்கீடு செய்திருந்தேன். ஏழை மக்களுக்கு இலவசமாக 10 கிலோ அரிசி வழங்கினேன். அனைத்து சமுதாய மக்களின் வளர்ச்சிக்கும் நிதி ஒதுக்கினேன். மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தபின்பு எந்த ஒரு வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் எஸ்.டி மற்றும் எஸ்.சி. சமுதாயங்களுக்கு எத்தனை கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது, பா.ஜனதா ஆட்சியில் ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையால் சொல்ல முடியுமா?.

இந்த விவகாரம் பற்றி ஒரே மேடையில் என்னுடன் விவாதம் நடத்த பசவராஜ் பொம்மை தயாரா?. ஜனதாதளம் (எஸ்) கட்சி மதசார்பற்றது என்று சொல்கிறார்கள். இடைத்தேர்தலில் காங்கிரசை தோற்கடிக்க பா.ஜனதாவுடன் கைகோர்த்து, 2 தொகுதிகளிலும் முஸ்லிம் வேட்பாளர்களை ஜனதாதளம் (எஸ்) கட்சி நிறுத்தி உள்ளது. இவ்வாறு கைகோர்த்து செயல்படுவதன் மூலம் பா.ஜனதாவுக்கும், ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கும் எந்த வேறுபாடும் இல்லை.”

இவ்வாறு சித்தராமையா பேசினார்.

மேலும் செய்திகள்