பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் பொதுமக்கள் கொல்லப்படுவது வேதனை அளிக்கிறது; மெகபூபா முப்தி
ஜம்மு காஷ்மீரில் நேற்று நடைபெற்ற என்கவுண்டரில் ஒரு பாகிஸ்தான் பயங்கரவாதி உள்பட 4 பேர் கொல்லப்படனர்.
ஜம்மு,
ஜம்மு காஷ்மீரின் ஹைட்ரபோரா பகுதியில் நேற்று பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இந்த துப்பாக்கிச்சண்டையில் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஒரு பயங்கரவாதியும் அவனது கூட்டாளியும் கொல்லப்பட்டனர். இந்த துப்பாக்கிச்சண்டையின் போது ஜம்மு காஷ்மீரை சேர்ந்த ஒரு மருத்துவரும், வீட்டு உரிமையாளரும் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரியும் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி, அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படும் சம்பவம் வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளார். இது குறித்து மெகபூபா முப்தி கூறுகையில்,
“ ஹைடர்போரா என்கவுண்டரில் பயங்கரவாதி கொல்லப்பட்டதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், வீட்டு உரிமையாளர் மனித கேடயமாக பயன்படுத்தப்பட்டதாகவும், இளம் மருத்துவரும் கொல்லப்பட்டதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். பயங்கரவாதிகளுக்கு எதிரான சண்டையின் போது பொதுமக்களை நீங்கள் (பாதுகாப்பு படை) குறிவைப்பது வேதனை அளிப்பதாக உள்ளது” என்றார்.