கொரோனா பாதிப்பு 202 நாட்கள் தொடர் சிகிச்சை;வீடு திரும்பிய பெண்ணுக்கு உற்சாக வரவேற்பு

குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் வரவேற்றனர்.

Update: 2021-11-20 11:22 GMT
குஜராத்,

கடந்த மே 1-ஆம் தேதி குஜராத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கீதா தர்மிக் (வயது45) என்ற பெண் ஒருவர் தாஹோட் நகரில் உள்ள ரெயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார்.  அவரது கணவர் ரெயில்வே ஊழியராக உள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு வாரத்திற்குள் கீதாவின் உடல்நிலை மோசமடையத் தொடங்கியது, அதன் பிறகு, அவர் வதோதரா நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். மே 24 அன்று, மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில், அவரது குடும்பத்தினர் அவரை மீண்டும் தாஹோட் ரெயில்வே மருத்துவமனைக்கு மாற்றினர்.

கொரோனா தொற்று காரணமாக அவரது நுரையீரல் கடுமையாக பாதிப்படைந்ததால், வெண்டிலேட்டர் உதவியுடன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் 202 நாட்கள் தொடர் சிகிச்சைக்கு பிறகு அவர் ரெயில்வே மருத்துவமனையில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார். அவரை மருத்துவமனை பணியாளர்கள் மலர் தூவி உற்சாகத்துடன் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். 

 கீதாவை குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் வரவேற்றனர். இது குறித்து கீதா கூறுகையில், எனது இந்த கடினமான நாட்களிலும் எனக்கு உறுதுணையாக இருந்த எனது குடும்பத்திற்கும், ரெயில்வே மருத்துவமனை ஊழியர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்று கூறினார்.

மேலும் செய்திகள்