நல்லாட்சி குறியீடு வெளியீடு; நீதி, பொதுமக்கள் பாதுகாப்பில் தமிழகம் முதலிடம்

நல்லாட்சி குறியீட்டில் நீதி, பொதுமக்கள் பாதுகாப்பில் தமிழகம் முதலிடத்தைப் பெற்றுள்ளது.

Update: 2021-12-25 19:40 GMT
நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை தயாரித்த 2021-ம் ஆண்டு நல்லாட்சிக் குறியீட்டை, நல்லாட்சி தினத்தன்று டெல்லி விஞ்ஞான் பவனில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று வெளியிட்டார்.

தமிழ்நாடு முதலிடம்

இதில் நீதி மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புப் பிரிவில் ‘ஏ' குழு மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.

நல்லாட்சி தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய மத்திய மந்திரி அமித்ஷா, கடந்த 7 ஆண்டுகளில் நரேந்திர மோடி அரசு வழங்கிவரும் நல்லாட்சிக்காக மக்கள் நீண்ட காலமாகக் காத்திருந்தனர். மோடி அரசால் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சியின் பலன்களை மக்கள் பெறத் தொடங்கியதால், 2014-ம் ஆண்டு முதல் ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது.

நல்லாட்சிக்கு உதாரணமாக, கடந்த 7 ஆண்டுகளில் மோடி அரசின் மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டுகூட இல்லை. ஏனெனில் இது தூய்மையான, வெளிப்படையான நிர்வாகம்.

மந்திரி ஜிதேந்திர சிங்

இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய பணியாளர் நலத்துறை மந்திரி ஜிதேந்திர சிங், குடிமக்களை மையப்படுத்திய நிர்வாகம் மோடி அரசின் ஆட்சி மாதிரியின் இதயத்தில் உள்ளது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஆட்சியின் நிலையை மதிப்பிடுவதற்கு நல்லாட்சி குறியீடு உதவும்.

நல்லாட்சி குறியீடு 10 துறைகள் மற்றும் 58 குறிகாட்டிகளை உள்ளடக்கியது ஆகும். அவை, விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகள், வணிகம் மற்றும் தொழில்கள், மனிதவள மேம்பாடு, பொது சுகாதாரம், பொது உள்கட்டமைப்பு மற்றும் பயன்பாடுகள், பொருளாதார நிர்வாகம், சமூக நலன் மற்றும் மேம்பாடு, நீதித்துறை மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மற்றும் குடிமக்களை மையப்படுத்திய ஆளுகை.

4 பிரிவுகள்

நல்லாட்சி குறியீடு-2021, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை 4 பிரிவுகளாக வகைப்படுத்துகிறது. அதாவது, குழு ‘ஏ’ மாநிலங்கள், குழு ‘பி’ மாநிலங்கள், வடகிழக்கு மற்றும் மலை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள். மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்