போலீஸ் ரோந்து வாகனம் மீது கவிழ்ந்த லாரி - 3 போலீசார் உயிரிழப்பு

போலீஸ் ரோந்து வாகனம் மீது லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 3 போலீசார் உயிரிழந்துள்ளனர்.

Update: 2022-01-04 04:33 GMT
பாட்னா,

பீகார் மாநிலத்தின் பாட்னா மாவட்டம் பியூர் மோர் பகுதிக்கு உள்பட்ட போலீஸ் நிலையத்தை சேர்ந்த போலீசார் இன்று அதிகாலை வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். ரோந்து வாகனத்தில் 5 போலீசார் பயணம் செய்தனர்.

இந்நிலையில், பியூர் மோர் பகுதியில் உள்ள சாலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது அங்கு கட்டுப்பாட்டை இழந்து வேகமாக வந்த லாரி போலீஸ் ரோந்து வாகனம் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் ரோந்து வாகனம் தீப்பற்றியது. மேலும், ரோந்து வாகனத்தில் பயணித்த 3 போலீசார் தீக்காயங்களுடன், உடல்நசுங்கியும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் 2 போலீசார் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்த போலீசாரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடுமையான பனிமூட்டம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் செய்திகள்