ரூ.10 லட்சத்தை இழந்த வங்கி பெண் ஊழியர்

உப்பள்ளியில் அதிக பணம் சம்பாதிக்கும் ஆசையில் வங்கி பெண் ஊழியர் ரூ.10 லட்சத்தை இழந்துள்ளார்.

Update: 2022-07-05 15:42 GMT

உப்பள்ளி;


உப்பள்ளி டவுன் கேஷ்வாப்பூர் சாந்திநகரை சேர்ந்தவர் சவுமியா. இவர் தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் வீட்டில் இருந்தபடியே ஒரு நாளைக்கு ரூ.8 ஆயிரம் சம்பாதிக்கலாம் என இணையதளத்தில் ஒரு விளம்பரத்தை சவுமியா பார்த்துள்ளார்.

இதனால் வீட்டில் இருந்தபடியே பணம் சம்பாதிக்கும் ஆசையில், அந்த இணையதள விளம்பரத்தில் இருந்த செல்போன் எண்ணுக்கு தொடர்புகொண்டு பேசினார். அப்போது எதிர்முனையில் பேசிய நபர், இதில் இணைவதற்கு முதல்கட்டமாக ரூ.50 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதனை நம்பிய சவுமியாவும் அந்த நபர் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ.50 ஆயிரத்தை அனுப்பி வைத்துள்ளார். அதன்பிறகும், பல்வேறு காரணங்களை கூறி பல்வேறு தவணைகளில் ரூ.10 லட்சம் வரை சவுமியா, மர்மநபர் கூறிய வங்கி கணக்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால், சவுமியாவுக்கு வேலை எதுவும் கிடைக்கவில்லை.

அப்போது தான், மர்மநபர் தன்னிடம் ரூ.10 லட்சம் வாங்கி மோசடி செய்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் உப்பள்ளி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்