தெலுங்கானா கவர்னராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்பு

ராதாகிருஷ்ணனுக்கு தெலுங்கானா ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அலோக் ஆராதே பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

Update: 2024-03-20 10:01 GMT

ஐதராபாத்,

தெலுங்கானா கவர்னராகவும், புதுவை மாநில துணை நிலை கவர்னராகவும் பதவி வகித்து வந்தவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன். இவர் திடீரென்று அந்த 2 பதவிகளையும் நேற்று முன்தினம் ராஜினாமா செய்தார்.

அதன்பிறகு ஐதராபாத்தில் இருந்து சென்னை திரும்பிய தமிழிசை சவுந்தரராஜன், தான் முழுநேர அரசியல் பணியில் ஈடுபடப்போவதாக தெரிவித்தார். இதனிடையே நாடாளுமன்ற தேர்தலில் தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜனதா சார்பில் அவர் போட்டியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அவரது ராஜினாமாவை ஜனாதிபதி திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டார். இதையடுத்து, ஜார்க்கண்ட் மாநில கவர்னராக இருக்கும் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தெலுங்கானா கவர்னர் மற்றும் புதுவை மாநில துணை நிலை கவர்னர் பொறுப்புகள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. இதற்கான நியமன உத்தரவை ஜனாதிபதி திரவுபதி முர்மு பிறப்பித்தார்.

இந்நிலையில், இன்று தெலுங்கானா கவர்னராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதிவியேற்றார். ராஜ்பவனில் நடைபெற்ற விழாவில் அவருக்கு தெலுங்கானா ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அலோக் ஆராதே பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அரியானா கவர்னர் பண்டாரு தத்தாத்ரேயா, தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, மற்றும் தெலுங்கானா மந்திரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்