துணை முதல்-மந்திரி பதவியால் தேவேந்திர பட்னாவிஸ் அதிருப்தியா?- கட்சி அலுவலக கொண்டாட்டத்தை புறக்கணித்தார்
மராட்டியத்தில் ஆட்சியை பிடித்ததற்காக, பா.ஜனதா அலுவலகத்தில் நடந்த கொண்டாட்டத்தில் தேவேந்திர பட்னாவிஸ் கலந்து கொள்ளவில்லை. அவருக்கு துணை முதல்-மந்திரி பதவி வழங்கியதால் அதிருப்தி அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது.
மும்பை,
மராட்டியத்தில் ஆட்சியை பிடித்ததற்காக, பா.ஜனதா அலுவலகத்தில் நடந்த கொண்டாட்டத்தில் தேவேந்திர பட்னாவிஸ் கலந்து கொள்ளவில்லை. அவருக்கு துணை முதல்-மந்திரி பதவி வழங்கியதால் அதிருப்தி அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது.
பட்னாவிஸ் அதிருப்தி?
ஏக்நாத் ஷிண்டே மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதா ஆதரவுடன் மராட்டியத்தில் ஆட்சி அமைத்து உள்ளனர். நேற்று ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரியாகவும், தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்-மந்திரியாகவும் பொறுப்பேற்று கொண்டனர். முன்னதாக ஏக்நாத் ஷிண்டேயை புதிய முதல்-மந்திரி என அறிவித்த போது, தேவேந்திர பட்னாவிஸ் தான் மாநில அரசில் அங்கம் வகிக்க மாட்டேன் என கூறினார்.
பின்னர் பா.ஜனதா தலைவர் ஜே.பி. நட்டா தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்-மந்திரியாக பதவியேற்க வேண்டும் என வலியுறுத்தினார். இதையடுத்து தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்-மந்திரியாக பொறுப்பேற்று கொண்டார்.
சிவசேனாவை உடைத்து மீண்டும் மாநிலத்தில் பா.ஜனதா அதிகாரத்தை கைப்பற்ற தீவிரமாக ஈடுபட்டவர் தேவேந்திர பட்னாவிஸ். எனவே முதல்-மந்திரி பதவி வழங்கப்படாததால் அவர் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கொண்டாட்டத்தில் பங்கேற்கவில்லை
இந்தநிலையில் இன்று மும்பை பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் மராட்டியத்தில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியதற்காக கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் தேவேந்திர பட்னாவிஸ் கலந்து கொள்ளவில்லை.
இந்தநிலையில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை), மற்றும் அதற்கு மறுநாள் நடைபெற உள்ள சிறப்பு சட்டபேரவை கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்வதில் தேவேந்திர பட்னாவிஸ் மும்முரமாக இருப்பதால் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறியுள்ளன.
இதேபோல மராட்டியத்தில் நிலவும் அரசியல் பரபரப்பு காரணமாக ஐதராபாத்தில் இன்று முதல் நடந்து வரும் பா.ஜனதா தேசிய செயற்குழு கூட்டத்திலும் தேவேந்திர பட்னாவிஸ் கலந்து கொள்ள மாட்டார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாதது குறித்து தேவேந்திர பட்னாவிஸ் கட்சி மேலிட தலைவர்களிடம் பேசிவிட்டதாக மூத்த நிர்வாகி ஒருவர் கூறினார்.