வில்வித்தையில் தங்கம்; இந்தியாவுக்கு பெருமை தேடி தந்த ஜோதி சுரேகா...
ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை ஜோதி சுரேகா தங்க பதக்கம் வென்றுள்ளார்.
டாக்கா,
வங்காளதேசத்தின் டாக்கா நகரில் ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் 2021 போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், மகளிர் தனிநபர் இறுதி போட்டியில் 25 வயதுடைய இந்திய வீராங்கனை ஜோதி சுரேகா வென்னம், முன்னாள் உலக சாம்பியனான கொரியா வீராங்கனை ஹோ யூஹியுன் என்பவரை 146-145 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி தங்க பதக்கம் வென்றுள்ளார்.
இதேபோன்று, இதற்கு முன் இன்று நடந்த கலப்பு இரட்டையர் போட்டி ஒன்றில், கொரிய நாட்டின் கிம் யுன்ஹீ, சோய் யாங்ஹீ இணை மற்றும் இந்தியாவின் ரிஷப் யாதவ், ஜோதி சுரேகா வென்னம் இணை விளையாடின.
இந்த போட்டியில், 155-154 என்ற புள்ளி கணக்கில் கொரிய இணை, இந்திய இணையை வீழ்த்தி வெற்றி பெற்று தங்க பதக்கம் தட்டி சென்றது. இந்திய இணை வெள்ளி பதக்கம் வென்றது. இதனால், ஜோதி சுரேகா ஒரே நாளில் இந்தியாவுக்கு இரு பதக்கங்களை பெற்று தந்து பெருமை சேர்த்து உள்ளார்.