ராமேசுவரம், கோட்டைப்பட்டினம் மீனவர்கள் 17 பேர் யாழ்ப்பாணம் சிறையில் அடைப்பு

இலங்கை கடற்படை சிறைபிடித்த ராமேசுவரம், கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த 17 மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Update: 2023-09-14 19:00 GMT

இலங்கை கடற்படை சிறைபிடித்த ராமேசுவரம், கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த 17 மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இலங்கை கடற்படை

ராமேசுவரத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்த மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

ராமேசுவரத்தில் இருந்து அந்தோணி லியோன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அருண் (வயது 40), கிங்ஸ்டன்(38), முருகன்(38), ரிட்டன்(40) உள்ளிட்ட 8 மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றிருந்தனர். நேற்று முன்தினம் இரவில் இந்த மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் படகில் இருந்த மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்து இலங்கையின் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றனர். படகும் பறிமுதல் செய்யப்பட்டது.

கோட்டைப்பட்டினம்

இதே போல் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த 9 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களையும் காங்கேசன் துறை கடற்படை முகாமில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான ராமேசுவரத்தை சேர்ந்த 8 மீனவர்களில் 2 பேர் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

யாழ்ப்பாணம் சிறையில் அடைப்பு

17 மீனவர்களும் நேற்று ஊர்க்காவல்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது நீதிபதி, வருகிற 27-ந் தேதி வரை மீனவர்களை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து 17 மீனவர்களும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நடவடிக்கையானது அந்த 17 மீனவர்களின் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. அவர்களையும், அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் உடனே விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்