கண்மாயில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி

சிவகாசி அருகே பிறந்தநாள் விழாவை கொண்டாடிவிட்டு கண்மாயில் குளிக்க சென்ற சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2023-02-26 18:56 GMT

சிவகாசி, 

சிவகாசி அருகே பிறந்தநாள் விழாவை கொண்டாடிவிட்டு கண்மாயில் குளிக்க சென்ற சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நண்பர்கள்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் முத்துமாரி நகரை சேர்ந்த மோகன் மகன் யோசேபு(வயது 16). கருப்பசாமி நகரை சேர்ந்த சுந்தரம் மகன் கார்த்திக்(16). இவர்களது நண்பர்கள் ஸ்ரீகுமரன்(16), சங்கர்(16). இவர்களில் தற்போது கார்த்திக், ஸ்ரீகுமரன், சங்கர் ஆகிய 3 பேர் மட்டும் பிளஸ்-1 படித்து வந்தனர்.

யோசேபு மேற்கொண்டு படிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இணைப்பிரியாத நண்பர்களான இவர்கள் எங்கு சென்றாலும் சேர்ந்து செல்வது வழக்கம்.

பிறந்தநாள்

இந்தநிலையில் யோசேபுக்கு நேற்று பிறந்தநாள் என்பதால் நண்பர்களுடன் காலையில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடி உள்ளார். பின்னர் தனது நண்பர்களுக்கு மதிய உணவு விருந்து அளிக்க உள்ளதாக வீட்டில் உள்ளவர்களிடம் கூறி விட்டு வந்துள்ளார். அவருடன் கார்த்திக், ஸ்ரீகுமரன், சங்கர் ஆகியோர் வந்துள்ளனர். அவர்கள் 4 பேரும் திருத்தங்கல்-செங்கமலநாச்சியார்புரம் ரோட்டில் உள்ள பெரியகுளம் கண்மாய்க்கு குளிக்க சென்றனர்.

அப்போது கண்மாயில் தண்ணீர் அதிகம் இருந்ததால் ஸ்ரீகுமரன், சங்கர் கண்மாய்க்குள் இறங்கவில்லை என்று கூறப்படுகிறது. யோசேபு, கார்த்திக் இருவர் மட்டும் கண்மாயில் இறங்கி குளித்துள்ளனர்.

2 பேர் மூழ்கி பலி

அப்போது கண்மாயில் ஆழமான பகுதிக்கு யோசேபு, கார்த்திக் இருவரும் சென்றுள்ளனர். இதில் இருவரும் தண்ணீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது. இதை கரையில் அமர்ந்து இருந்த ஸ்ரீகுமரன், சங்கர் ஆகியோர் அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டுள்ளனர்.

அப்போது அங்கு நின்று கொண்டிருந்த சிலர் கண்மாய்க்குள் இறங்கி சிறுவர்களை மீட்க முயன்றனர். இருப்பினும் 2 சிறுவர்களும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

சோகம்

இதுகுறித்து தகவல் அறிந்த திருத்தங்கல் போலீசார், சிவகாசி தீயணைப்பு நிலையத்தினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கண்மாயில் மூழ்கி இறந்த சிறுவர்கள் யோசேபு, கார்த்திக் ஆகியோர் உடல்களை மீட்டனர். பின்னர் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து சிறுவர்களின் உடல்களை பார்த்து கதறி அழுதனர். பிறந்த நாள் கொண்டாடி விட்டு குளிக்க சென்ற சிறுவர்கள் கண்மாய் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் திருத்தங்கல் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்