பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு:தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

சேந்தமங்கலம் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாமக்கல் மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

Update: 2023-02-09 18:45 GMT

பாலியல் தொந்தரவு

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள மலைவேப்பங்குட்டை கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது40). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4-ந் தேதி, 5-ம் வகுப்பு படித்து வந்த 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பேளுக்குறிச்சி போலீசில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை புகார் செய்தார்.

அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் செந்தில்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நாமக்கல் மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் விஜயபாரதி வாதாடினார்.

20 ஆண்டுகள் சிறை

இவ்வழக்கு விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. நீதிபதி முனுசாமி, குற்றம்சாட்டப்பட்ட செந்தில்குமாருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். இதை தொடர்ந்து செந்தில்குமார் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்